சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பல் அடைந்த வெண் தலையில் பண் - பழந்தக்கராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=jc-3lGGQv64 |
1.109
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் உறு வனமுலை மங்கை பண் - வியாழக்குறிஞ்சி (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அன்ன மென் நடை அரிவையோடு பண் - நட்டராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=zc688RhkilI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.047  
பல் அடைந்த வெண் தலையில்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்சிரபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய், வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே? | [1] |
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய், அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம் சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார், செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே? | [2] |
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய், ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப, சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே? | [3] |
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய், மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள் செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே? | [4] |
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக் கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே? | [5] |
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும் பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய், திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே? | [6] |
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால் பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து, சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே? | [7] |
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால் நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார் துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும் சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே! | [8] |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச, சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே? | [9] |
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம் மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே, சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே? | [10] |
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.109  
வார் உறு வனமுலை மங்கை
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருச்சிரபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
வார் உறு வனமுலை மங்கை பங்கன், நீர் உறு சடை முடி நிமலன், இடம் கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் சீர் உறு வளவயல் சிரபுரமே. | [1] |
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான், திங்களொடு அரவு அணி திகழ் முடியன், மங்கையொடு இனிது உறை வள நகரம் செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே. | [2] |
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித் திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத் தெரிந்தவன், வள நகர் சிரபுரமே. | [3] |
நீறு அணி மேனியன், நீள் மதியோடு ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்- கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் சேறு அணி வளவயல், சிரபுரமே. | [4] |
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்திய புறவு அணி சிரபுரமே. | [5] |
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன், கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த சிலையவன், வள நகர் சிரபுரமே. | [6] |
வான் அமர் மதியொடு மத்தம் சூடித் தானவர் புரம் எய்த சைவன் இடம் கான் அமர் மடமயில் பெடை பயிலும் தேன் அமர் பொழில் அணி சிரபுரமே. | [7] |
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக் கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள் இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன் செறுத்தவன், வள நகர் சிரபுரமே. | [8] |
வண்ண நல்மலர் உறை மறையவனும் கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய் விண் உற ஓங்கிய விமலன் இடம் திண்ண நல்மதில் அணி சிரபுரமே. | [9] |
வெற்று அரை உழல்பவர், விரி துகிலார், கற்றிலர் அற உரை புறன் உரைக்க, பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச் செற்றவன் வள நகர் சிரபுரமே. | [10] |
அருமறை ஞானசம்பந்தன், அம் தண் சிரபுரநகர் உறை சிவன் அடியைப் பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் திருவொடு புகழ் மல்கு தேசினரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.102  
அன்ன மென் நடை அரிவையோடு
பண் - நட்டராகம் (திருத்தலம் திருச்சிரபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம் பெருமானார், மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம் தாம் பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர் ஆர் பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே. | [1] |
கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள ஆமை, சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல் விடம் உண்ட நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை நில்லாவே. | [2] |
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட மதித்து, அன்று, கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு, அருள்புரிந்தார் பூந் தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள், குறுகாவே. | [3] |
மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை செய்தார், பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார், வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே. | [4] |
பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம், ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய் நின்றார் சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே. | [5] |
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள் அவை மூட, ஆழி, எந்தை! என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து உயர்ந்தார் தாம், யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன், எம்பெருமானார், வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை அடையாவே. | [6] |
பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு சுடுகாட்டில், வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும் வித்தகனார்; ஒண் சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார் தாம்; தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர் தளராரே. | [7] |
இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து, அன்று, கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து, அருள் செய்தார் புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன் இடைப் புகுந்து ஆரும், குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை குறுகாவே. | [8] |
வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன், என்று இவர் அன்று கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும் பறந்தும், தாம் பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி; கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை கூடாவே. | [9] |
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத் துவர் தோய்ந்த செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள் பெருமானார் முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள வாளை வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும், மிகத் தானே. | [10] |
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப் பெருந்தொத்தை, விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர் பெருமானை, பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே. | [11] |